வாழ்வென வாழுவீர்!
(நிலைமண்டில அகவற்பா)
============================
அவனி = பூமி, செகம் = உலகம்,
நான் பிறந்ததிலிருந்து 1977 வரை தஞ்சை, நாகை (வெளிப்பாளையம், காடம்பாடி), கடலூர், முதலான ஊர்களே என்றன் வசிப்பிடங்கள். 1977இல் இருந்தெனையொரு பாவலனாக (கவிஞனாக), ஒரு துடுப்பாட்ட வீரனாக (கிரிக்கெட்டு ஆட்டக்காரனாக), குமுகாயத்தில் தாழ்வுற்றோர்/ ஊனமுற்றோர்/ முது குடிமக்களுக்கு என்னால் இயன்றதைச் செய்யும் எளியோனாக, மருத்துவம் அனுமதிக்கும் அளவுக்குக் குருதிக் கொடையளிப்பவனாக, என் விழிப்படலத்தை/உடலை கொடையளிக்க ஆவனச் செய்திருப்பவனாக, புதுச்சேரி அரசுத்துறையில் ஒரு ஊழியனாக, பணிநிறைவில் ஒரு அரசிதழ் அலுவலனாக ஆக்கி வாழ வைத்திருக்கும் புதுவையே இற்றைக்கு என்றன் ஊர். வாழ வைத்திருக்கும் மண்ணை மட்டுமின்றி, எந்த ஊரையும், நல்ல மனம் படைத்தவரையும், எனை வாழவைக்கும் பேரையும், என்றன் பொள்ளிகையைத் தூற்றுபவரையும் கூட, போற்றுகின்ற பண்பினை, கற்றுத் தந்ததிப் புதுவை மண்ணே!
என்றுமே எம்புதுவை பாவானம் தான். எத்தனை மரபியற் கவிகள்; எத்தனைப் புதுக்கவிகள்; எத்தனை பாவரங்கங்கள்; எத்தனைக் கவிமாமணிகள்; எத்தனைக் கலைமாமணிகள்; எத்தனைத் தமிழ்மாமணிகள்.
==============================
இறங்கிய நாள்முதலாய், இருந்திறக்கும் நாள்வரையில் எத்தனையெத்தனையோ கற்கிறோம். கற்றலே மேன்மை. நம் பிள்ளைகளுக்குக் கல்வியைத் தராமல் இருந்துவிடாதீர்கள். கட்டிக் கொடுத்தச் சோறும், சேர்த்து வைத்த செல்வமும் வாழ்வியலை மேம்படுத்தும் என்பது மிகக் குறைந்த மாற்றுக் கருத்தே. கற்றவரில் ஒரிரண்டு விழுக்காடு மூளை மழுங்கியவராய், தன்னலம் கொண்டவராய், அடுத்தவரை ஏய்ப்பவராய் இருக்கலாம். ஆனால் கற்றவர் அனைவரும் தீயவரல்லர்; எனவே கல்வியால் மட்டுமே யாரையும், எதையும் பகுத்தறிய ஏலும். நான் சொல்கிறேன் என்பதற்காய் எதுவும் மெய்ம்மை ஆகிவிடாது. காலத்தீ புடம் போட்ட, ஐயனின் குறளைப் பார்த்தாலே விளங்கும், "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு."
====================================
எனக்குச் சாதியுமில்லை; மதமுமில்லை; ஆற்றலுணர், அறிவென்ற அகண்ட அறிதலு மில்லை: எழுச்சியுடன் ஆர்த்தெழுகும் ஆற்றலில்லா அறிவிலி யென்றிங்கே அலைந்தலைந்து தேடுகிறேன்; அறம் எங்கேயென்றே தேடுகின்றேன்! எதற்கிந்த விளையாட்டு; ஏனிந்தத் தீக்குளியல்? வேதனைதான் வாழ்வென்றால், மேதினியில் நீதியெங்கே? நாதனவன் நேர்கணக்கை நாடுகின்றேன் நாடோறும்!
காதலும்/ கனவுலா கவிதை மட்டுந்தான் சாசுவதமோ? சாற்றுங்கள் சற்றே! நடக்கும் கொடுமைகளைப் பேச வாயற்ற, சாதிமதச் சழக்குகள் தருவதென்ன? உனக்கும் ஆறடி/ எனக்கும் ஆறடி; இல்லையெனில் உனக்கும் ஒருவண்டி எருமுட்டை; எனக்கும் ஒருவண்டி எருமுட்டை. இதில் இறுமாப்பு/ ஏக்கழுத்தம் கொண்டு ஆட்டங்கள். கவிஞர்களே பாடுங்கள்; நாளைய வைகறைக்காக இன்றே அறம் பாடிச் சாடுங்கள். வெங்கதிர் எழுந்து வெள்ளியொளி பரவட்டும்.
===========================================
===========================================
பெண்டிரின் உண்மை உயர்வு....
==============================
மங்கைச் சிட்டென, மலரும் மொட்டென,
மினுக்கும் பொட்டென, வெள்ளித் தட்டெனத்
தங்கத் துகளாம் சங்கத் தமிழைக்
தழுவி யணைக்குஞ் சந்தக் கவிஞரே!
மின்னும் பாக்கள் விளையும் மாகடல்;
மின்னுங் கவிஞர் வனையும் பாக்கடல்;
சித்தக் கடலில் சிக்குஞ் சிப்பிகள்;
எத்தனைச் சிப்பியில் இருக்குமோ முத்து?
அருமைத் தமிழ்க்கரை அளையுமென் கரத்திலே,
தரமெனக் கிடைப்பதோ சங்குஞ் சோழியும்;
ஆழியின் கரையிலே அலையால் ஒதுங்கிடும்
சோழியும் கிளிஞ்சலும் சுந்தரச் சிப்பியுஞ்
சந்தனத் தமிழின் சங்குஞ் சிறப்பெனில்,
செந்தமிழ் நித்திலஞ் சேர்வது மெவர்க்கோ?
பழச்சுவைக் கவிதை பழமைதா னாயினும்,
உழலுமென் நினைவிலே வெறுமை; உண்மை!
கற்பனைக் கவிவளம் கவிஞனின் சொத்து;
விற்பனைக் கல்லவ் விளையும் முத்து!
ஆழ்கடல் நுளைந்தே அறிஞரும் முத்தினை
மூழ்கித் தேடி முனையும் போதிலே,
சூழ்மலை முகிலெழிற் சூழலைப் புனைகையில்,
வாழ்விலே பெண்ணின வன்முறை சாடுவீர்!
கவின்மிகு கனவுலாக் காதலை வனைகையில்,
புவியினில் பொன்மகள் பொறுதலைச் சாடுவீர்!
நாணுமச் செம்மொழி நங்கையைப் பாடுவோர்க்
காணுமிப் பெண்ணழி கள்ளமுஞ் சாடுவீர்!
கண்நிகர் முன்னோர் நன்னெறி ஏத்துவோர்ப்
புண்நிகர் புல்லரின் புன்னெறி சாடுவீர்!
மன்னுயிர் காத்திடும் மழைவளஞ் சொல்கையில்,
இன்றைய மங்கையர் இழிநிலைச் சாடுவீர்!
பாட்டி லுறைந்திடு பண்ணிசைப் போற்றுவோர்
நாட்டின் நங்கையர் நாசமுஞ் சாடுவீர்!
பல்சுவை யுணவால், பல்வகை யணியால்,
நல்லரும் நிலையை நங்கைய ருறுவரோ?
இருக்கையில் மகளிரு மின்றே பெற்றிடும்
உரிமைதான் உண்மையில் உயர்வெனச் சாற்றுவீர்!
=====================================
இராச. தியாகராசன்.
காவிரிக்கரையில் திரு வேங்கட்டராமன், திருமதி இலக்குமியம்மாள் ஆகியோர்க்கு நல்மகனாய் பிறந்தவர், மாந்தக்கணினி, நூற்கடல் என்றெல்லாம் போற்றப்பட்ட திரு தி.வே.கோபாலய்யர். அவர் வாழ்ந்த காலத்தில், அவருடன் அளவளாவி, என்றன் இலக்கண ஐயம் பலவற்றை அகற்றி, நான் தெளிவு பெற்றிருக்கிறேன். அவருடைய 26 ஆண்டுகால உழைப்பில் உருவான18 தொகுப்புகள் கொண்ட, "பேரிலக்கண அகராதி," தானெனக்கு இற்றைக்கும் என் இலக்கண ஐயங்களைக் களைய உதவுகிறது.
==================================
==================================பலருக்கும் அன்பான காதலி இருக்கக் கூடும். அவருடனேயே திருமணமும் ஆகியிருக்கக் கூடும்; ஆகாமலும் போயிருக்கக் கூடும். ஆனால் காதலென்பது மெய்ம்மை. என்னுடைய உள்ளங்கவர் காதலி யாரென்று கேட்கிறீர்களா?
================================
மகாகவி பாரதி |